ராணிப்பேட்டை–ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பேட்டி

ராணிப்பேட்டை, ஏப். 10 – ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் எஸ். சாம்பசிவம் தலைமையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வாரியத்தில் வழங்கப்படும் நல திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரவை கூட்டம் வியாழனன்று (ஏப். 10) அம்மூர் காந்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாநில பொது செயலாளர் கோவை என். செல்வராஜ் பேசியதாவது, நடப்பு மானிய கோரிக்கையின் மீது தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுமானதொழிலாளர்களுக்கு ஓய்வு அறை, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவிப்புகளை வரவேற்கிறோம்.மேலும் வாரிய தீர்மானத்தின்படி ரூ. 2 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கு தற்போது வழங்கி வரும் 4 லட்சத்தை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் நடப்பு நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்திருந்த நிலையில் சற்று ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை என். செல்வராஜ், ஆர். துரைசாமி, சி. நந்தினி, மாவட்ட செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி, கே. நித்யானந்தம், பி.எஸ். பரமசிவம் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. லதா வாழ்த்தி பேசினார். உடன் எஸ்.ஜி. தீபா குணசேகரன், ஜி. ரவி, சத்தியமூர்த்தி, முருகானந்தம், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக அதிசயம், கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார்.