Others
வெதர்மேன் பிரதீப் ஜான்-சென்னைக்கு அடுத்த புயலா? மக்கள் நம்ப வேண்டாம்.
சென்னைக்கு அடுத்த புயல் குறித்து வதந்தி பரவி வரும் நிலையில் வெதர்மேன் பிரதீப் ஜான், அதை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார். வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் காரணமாக 4ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தது. பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
5ம் தேதி ஆந்திராவுக்கு சென்று நெல்லூர், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது. மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து 4 மாவட்ட மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் மேலும் ஒரு புயல் வரும் என்ற வதந்தி பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், வதந்தி குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், ‘இது அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். டிசம்பர் 10ம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகரும். இதற்கும் சென்னைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.