விழுப்புரம்—- விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழப்பு எதிரொலி.
* தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி உத்தரவு
* ஸ்பிரிட் விற்பனை செய்யும் தொழிற்சாலைகளுக்கு சீல் என எச்சரிக்கை
விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகிறவர்களை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு பிற்பகலில் செல்கிறார். இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பிக்கள், ஆணையர் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதிகளில் சாராய வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்று முன்தினம் அமரன் என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்துள்ளார். இதை சாப்பிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 9 பேர் உயிரிழந்தனர்.