-
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது என்பது குழந்தை பெற இயலாதவர்களுக்கு வரப்பிராசாதமாக கருதப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பெண்கள் மூலமாக வெளிநாட்டவர் குழந்தைப் பெற்றுக்கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால் இது காலப்போக்கில் வர்த்தகமாக மாறியதால் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. மேலும் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லாததும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெறுவது எனக்கூறி அப்பாவி பெண்கள் ஏமாற்றப்பட்டதும் அவர்களின் உடல், மன ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு இல்லாததும் அதிகரித்தது. மேலும் இது ஒரு வர்த்தகமாக உருவெடுத்து பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியது. இத்தகைய நிலையை மாற்றவே ஜூலை 15, 2019ம் ஆண்டு வாடகைத்தாய் ஒழுங்குமுறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2021 குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அங்கீகரிக்கப்பட்டது.வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முறையை வணீக ரீதியாக பயன்படுத்துவதை தடுக்கவும், வாடகைத்தாயாக உருவெடுக்கும் பெண்களின் நலன்கருதியும் இந்த சட்ட ஒழுங்குமுறை கொண்டுவரப்பட்டது.வாடகைத்தாய் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள்:வாடகைத்தாய் என்பது பெண்ணின் கருமுட்டை மற்றும் அவரது துணையின் விந்தணு இரண்டையும் எடுத்து உருவாக்கப்படும் கருவை, வேறொரு பெண் சுமந்து பெற்றுக் கொடுப்பார். அல்லது ஆணின் விந்தணுவை மட்டும் பெற்று வாடகைத்தாயின் கருமுட்டையுடன் கருவை உருவாக்கி குழந்தை பெற்றுக்கொடுப்பார். சுருங்க கூறினால் அந்த குழந்தையின் உயிரியல் தாயே வாடகைத்தாய் ஆவார். வாடகைத்தாய் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் வாடகைத்தாய் முறையை ஒழுங்குப்படுத்துகிறது. உடல் சார்ந்த பிரச்சனைகள் நோயின்பால் ஒரு தம்பதியினரால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்ற பட்சத்தில் மட்டுமே வாடகைத்தாய் முறையினை பயன்படுத்த இயலும். வணீக ரீதியாகவோ அல்லது சட்டவிரோதமான செயல்களுக்காகவோ வாடகைத்தாய் முறையை பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய செயலாகும். திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் இந்த முறையில் குழந்தை பெறுவதை இந்த சட்ட திருத்தம் தடுக்கிறது. திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்தால் மட்டுமே இந்த வாடகைத்தாய் முறையை பயன்படுத்த இயலும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று தரும் பெண் அந்த தம்பதியைனருக்கு உறவினராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். வாடகைத்தாயாக இருக்கும் பெண் 25 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும், ஏற்கனவே திருமணமாகி குழந்தை பெற்றிருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்க இயலும். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியரில் பெண்ணுக்கு 23 – 50 வயதுக்குள்ளும் ஆணுக்கு 26 – 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். சமபால் ஈர்ப்பாளர்கள், மனைவி அல்லது கணவன் இல்லாமல் தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சொத்து அனைத்திலும் வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு. வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தைகளை, தம்பதிகள் கைவிடக் கூடாது. சட்ட விரோதமாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவுபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்க, இந்த சட்டம் வழி செய்கிறது. வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற முயலும் தம்பதியருக்கு ஏற்கனவே குழந்தை இருக்கக்கூடாது (உயிரியல், தத்தெடுக்கப்பட்ட அல்லது வாடகைத் தாய்.) மன அல்லது உடல் குறைபாடுகள் உள்ள குழந்தை, அல்லது உயிருக்கு ஆபத்தான கோளாறு அல்லது நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருக்குமாயின் அவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி, வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆவதற்குத் தகுதி மற்றும் அதற்கான சான்றிதழ்களைப் பெற வேண்டும். 16 மாத காலத்திற்கு வாடகைத் தாய்க்கு பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் ஏதேனும் சிரமங்களை ஈடுசெய்யும் காப்பீட்டையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும் இந்த விதிப்படியுள்ளது.
Others