ரயில்வே பாதுகாப்பு ஆணையர்-ஒடிசா ரயில் விபத்துக்குமனித தவறே காரணம்…?
கடந்த ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலாசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நிர்ணயிக்கப்பட்ட மெயின் லைனுக்கு பதிலாக பஹானாக பாஜார் நிலையத்தின் லூப் லைனில் நுழைந்து நின்று கொண்டு இருந்த சரக்கு ரயிலில் மோதியது. இதில் தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் மீது பெங்களூரு – ஹவுரா இடையேயான அதிவேக ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். 1000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சதி வேலையே விபத்திற்கு காரணம் என கூறப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணைக்குஉத்தரவிடப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் கள ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திடம் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், முழுக்க முழுக்க மனித தவறால் மட்டுமே ரயில் விபத்து நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் சிக்னலிங் அறையில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணியின் போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள லெவல் கிராஸிங்கிலும் பணிகள் நடந்து வந்துள்ளது. ஆனால் பணிகள் முடிந்தது என தவறான தகவல் அளிக்கப்பட்டதாகவும் அதனால் வழங்கப்பட்ட தவறான சிக்னலாலும் ரயில் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை ஒருபுறம் நடந்து வருவதால் ரயில்வே ஆணையரின் விசாரணை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.