fbpx
Others

மு.க.ஸ்டாலின் இரங்கல்—முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவு

உபயதுல்லா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

  • திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா ( 83 ) உடல்நலக்குறைவால் தஞ்சாவூரில் காலமானார்.  இவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல்நலக் குறைவால் தஞ்சையில் காலமானார். அவருக்கு வயது 83. தி.மு.க. வர்த்தகர் அணி தலைவராக செயல்பட்டு வந்த அவர், தஞ்சாவூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் ஆவார். 27 ஆண்டுகளாக தஞ்சை நகர செயலாளராகவும், திமுக வர்த்தக அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். 2006-2011-ம் ஆண்டு கால கட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக இருந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க.வில் முக்கிய தலைவராக விளங்கிய அவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணாதுரை விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இரங்கல் செய்தியில், “முன்னாள் அமைச்சரும் கழக வர்த்தக அணித் தலைவருமான எஸ்.என்.எம். உபயதுல்லா  மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாகத் தேர்தல் களத்தில் இறங்கிய காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் மீதும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் கொண்டு கழகப் பணியாற்றி வந்த உபயதுல்லா என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். 1962-ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கலைஞர் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்காகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி அவரது நன்மதிப்பைப் பெற்றவர். மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி, தஞ்சை நடராஜன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தலைவர்களுடன் இணைந்து கழகம் வளர்த்த தீரர். 1987 முதல் 2014 வரை 27 ஆண்டுகள் தஞ்சை நகரக் கழகச் செயலாளராக இருந்த பெருமைக்குரியவர் உபயதுல்லா. நான்கு முறை தஞ்சை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றிய உபயதுல்லா 2006-ஆம் ஆண்டு கலைஞர் ஐந்தாவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது வணிக வரித்துறை அமைச்சராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தமிழறிஞர் மீது மட்டுமல்லாது, தமிழ்மொழி மீதும் காதல் கொண்டிருந்த உபயதுல்லா முப்பதாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை முத்தமிழ் மன்றம் என்ற அமைப்பை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது கழகப் பணிகளையும், மக்கள் பணியையும், மொழிப்பற்றையும் சிறப்பிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு கழக முப்பெரும் விழாவில் “கலைஞர் விருதினையும்”, இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசு விழாவில் தமிழ்நாடு அரசின் “பேரறிஞர் அண்ணா விருதினையும்” எனது கையால் வழங்கும் வாய்ப்பையும் பெற்றிருந்தேன். கழக நிகழ்ச்சிகளை, கூட்டங்களை எந்த இடர் வந்தாலும் எதிர்கொண்டு திறம்பட நடத்திக்காட்டும் ஆற்றல் பெற்றவர் உபயதுல்லா. கழகத்தின் மிகப்பெரும் தூணாக, மாறாத கொள்கைப் பற்றாளராக விளங்கிய உபயதுல்லா மறைவு கழகத்துக்கும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டக் கழகத்துக்கும் பேரிழப்பு என்றே கூற வேண்டும்.

Related Articles

Back to top button
Close
Close