முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை திடீர் மரணம்…!
Former minister Dalit Ezhilmalai Dead
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74,
தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945ம் ஆண்டு பிறந்தார். சாதி ஒழிப்பு அரசியலில் தீவிரமாக இயங்கிய இவர், 1970களில் ராணுவத்தில் பணிபுரிந்தார். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று ஜனாதிபதியிடம் பதக்கம் பெற்றவர்.
1990களில் பாமக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பிடித்தவர்.
பின்னர் பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் சார்பாக திருச்சி லோக்சபா தொகுதியில் 2001ம் ஆண்டு போட்டியிட்டு எம்பியானார். சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார் தலித் எழில்மலை.
சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தலித் எழில்மலை உயிர் பிரிந்தது. அவரது உடல் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது மகள் எழில் கரோலின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆவார்.