கோடநாடு மர்மக்கொலை எதிரொலி:இன்று மாலை ஆளுனரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
சென்னை: கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் கொடுக்கிறார்.
கோடநாடு எஸ்டேட் மர்ம மரணங்கள் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மர்ம மரணங்களுக்கு பின் யார் இருக்கிறார்கள், எதனால் இந்த மர்ம மரணங்கள் நடந்தது என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் மூன்று நாட்களுக்கு முன் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார்.
இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார்.
இதில் மேத்யூஸ் சாமுவேல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.
இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரை சந்தித்து இதுகுறித்து புகார் அளிக்க போவதாகவும் கூறினார்.
அதன் அடிப்படையில் இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து புகார் அளிக்க உள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு ஸ்டாலின் ஆளுநரை சந்திக்கிறார். முதல்வருக்கு எதிரான ஆதரங்களை ஆளுநரிடம் ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.