Others
முதல் திருநங்கை கிராம உதவியாளர்…
-
தமிழ்நாட்டில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்தில் உள்ள மேல்கரந்தை எனும் கிராமத்திற்கு திருநங்கை சுருதி கிராம உதவியாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று வழங்கினார். முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.இந்நிலையில், இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியான நபர்கள் கிராம உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டத்தில் உள்ள மேல்கரந்தை எனும் கிராமத்திற்கு திருநங்கை சுருதி கிராம உதவியாளாராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆண், பெண் என்ற சமூக பாலின வரையறைக்குள் அப்பாற்பட்ட திருநங்கை சமூகத்தினர் பல்வேறு உரிமை மறுப்புகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் உட்படுத்தப்பட்ட நிலையில், திருநங்கை சுருதியின் இந்த பணி நியமனம் பலருக்கும் மகிழ்ச்சியைத் தருவாதாக அமைந்துள்ளது. திருநங்கை ஒருவர் அதிகாரத்தை நோக்கி செல்வது மாற்றுப் பாலின மக்களிடத்தில் புத்துணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.பணி நியமனம் பெற்ற சுருதி, தனது கிராமத்தில் உள்ள அரசு சொத்துக்கள், அரசு மரங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு கட்டிடங்கள் ஆகியவைகளை பாதுகாப்பதுடன் சட்டம் ஒழுங்கு நிலை, தொற்று நோய் பரவுதலை கண்காணித்து மேல் நிலை அலுவலர்களுக்கு அவ்வபோது தெரிவிக்க வேண்டும்.