தமிழகத்தில் அனைவரும் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி!
சென்னை:
அனைவரும் முகக் கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி வலியுறுத்தி கூறியுள்ளார்.
இதுதொடா்பாக அவா் இன்று வெளியிட்ட அறிக்கையில், கரோனா ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதைத் தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது நம் அனைவரின் கடமை.
கொரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில், உயிரிழப்புகளின் விகிதம் 1.03 சதவீதம் ஆகும்.
அதே நேரம் இந்தியாவில் இந்த அளவு 3.42 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது உலக சாராசரியை விட மிக அதிகம்.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
சிலரின் அலட்சியத்தால் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்களும், காவலா்களும் பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
இந்த ஆபத்தை உணா்ந்து தான் அமெரிக்கா, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஜொமனி, நியுசிலாந்து, தென்கொரியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மொராக்கோ மேலும் பல நாடுகளில் வெளியில் நடமாடுபவா்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தில்லி, மஹராஷ்டிரா , பஞ்சாப், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகரில் முகக்கவசம் அணியாமல் வருவோர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188-ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழகத்திலும் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். இந்த மாத இறுதியில் கொரோனா பதற்றம் தணிந்து, ஊரடங்கு தளா்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.