புதிதாக மின் இணைப்புக்கு– லஞ்சம் கேட்ட மின் பொறியாளர் கைது…..
புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக். இவர் தன்னுடைய வீட்டிற்கு ஏற்கனவே சிங்கிள் பேஸ் உள்ள நிலையில் கூடுதலாக மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கட்டணத்தை செலுத்தி உள்ளார். அதன் பிறகு நொளம்பூரில் உள்ள மின் இணைப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்களை சரி பார்ப்பதற்காக இளநிலை பொறியாளர் கோதண்டராமனிடம் ஆவணங்களை கொடுத்துள்ளார். அப்போது கோதண்டராமன் கூடுதலாக மின் இணைப்பு வழங்குவதற்கு தனக்கு ரூ.10 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
5 நாட்கள் கழித்து மீண்டும் மின் பொறியாளர் கோதண்டராமனை நேரில் சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கோதண்டராமன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தராவிட்டால் மின் இணைப்பு வழங்க முடியாது என்று கரராக பேசியுள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியிடம் விகேக் புகார் அளித்துள்ளார். அவர்கள் அறிவுத்தலின்பேரில், ரசாயன தடவிய பணத்தை நொளம்பூர் காவல் நிலையம் அருகே கோதண்டராமனிடம் விவேக் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கோதண்டராமனை கையும் களமாக கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.