தெற்கில் தேய்ந்த பாஜக —தோல்விக்கு இதுதான் காரணமா….?
பாஜகவை போல் அல்லாமல், காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் முக்கிய தலைவர்களையே தேர்தல் வெற்றிக்காக நம்பியது. ஆனால் பாஜக பிரதமர், மத்திய அமைச்சர்கள் என வெளியூர் நபர்களை பரப்புரையின் போது பிரதானப்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு விகிதம் 40 சதவிதத்தை தாண்டியுள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் மாண்டியா மற்றும் ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகா சமூகம் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவிலான ஆதரவை அளித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு லிங்காயத்து சமூக மக்களும் காங்கிரசுக்கு தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். லிங்காயத்துக்களின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகி விட்டார். இதே போல் பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் லிங்காயத்து சமூக மக்களின் வாக்குகள் காங்கிரஸ் பெற வாய்ப்பாக அமைந்தது. வழக்கமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு வாக்குகளிக்கும் இஸ்லாமியர்கள், இந்த தேர்தலில் காங்கிரசை ஆதரித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பொம்மை அரசின் தலித்துக்களுக்கான 4 சதவிகித உள்ஒதுக்கீடும் பாஜகவிற்கு பலனளிக்கவில்லை. பெண்களின் வாக்குகளை கவர காங்கிரஸ் ஏராளமான திட்டங்களை அறிவித்திருந்தது. பெண்களுக்கு மாதம்தோறும் 2 ஆயிரம் ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம் என அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் சாதகமான முடிவை அளித்துள்ளன. முதலமைச்சர் பொம்மை மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பாஜகவின் பிம்பத்தை உடைத்தது. சாதனைகளை தெரிவித்து வாக்கு கேட்காமல், பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா என தேசிய தலைவர்கள் நம்பி தேர்தல் களத்தில் இறங்கியது கர்நாடக பாஜக. பிரதமர் மோடியின் பஜ்ரங் தள் பரப்புரையும் எடுபடவில்லை. மேலும், பாஜக வேட்பாளர்கள் தேர்வு, முழுக்க முழுக்க தேசிய தலைவர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உள்ளூர் அரசியலை புரிந்து கொள்ளாமல் வேட்பாளர்களை தேர்வு செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.