-
சித்ராபவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில், நடப்பாண்டு, சித்ரா பவுர்ணமி வியாழக்கிழமை இரவு 11.59 மணிக்கு தொடங்கி, இன்றிரவு 11.59 மணிக்கு முடிவடைகிறது. இதனால், நேற்று மாலை முதலே, பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்.சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். தேரடி வீதி, திருவுடல் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி என திரும்பிய திசை எல்லாம் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.சிவ வாத்தியங்கள் முழங்க கிரிவல பாதையில் பக்தர்கள் வலம் வந்து அண்ணாமலையாரை மனமுருகி வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக, திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமியையொட்டி சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Others