திருமாவளவன் பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரும், அவரது தங்கையும், மாற்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: காவல்துறையில் இருக்கும் சாதி வெறிகொண்ட சிலர், பொது சமூகத்தில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரை தனிமைப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதுபோலவே விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அழிக்க நினைக்கும் அவர்கள், இப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.நாங்குநேரி சம்பவத்தில் மாணவனைத் தாக்கியவர்கள், தங்களுக்கு தண்டனை கிடைக்காது, தாங்கள் எப்படியும் காப்பாற்றப்படுவோம், சட்டத்தின்பிடியிலிருந்து தாங்கள் தப்பிவிடுவோம் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற போலீஸார் முயற்சிப்பதாக திருமாவளவனின் பேசியது திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.