Others
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு—பார்வையாளர் பலி..!
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி சூரியூர், பாலமேடு உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூரியூரில் ஒவ்வொரு சுற்றிலும் காளையை அடக்குவதில் வீரர்கள் ஆர்வம் காட்டினர். வீரர்கள் காளையை அடக்குவதையும், காளைகள் வீரர்களை தெறிக்கவிடுவதையும் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞரும் வந்திருந்தார். பார்வையாளர் பகுதியில் நின்றிருந்த அவரை ஜல்லிக்கட்டு காளை திடீரென முட்டியதில் படுகாயமடைந்தார். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சற்று நேரத்திற்கு முன்பு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர் அரவிந்த் ராஜ் மாடு முட்டியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் திருச்சி சூரியூரில் பார்வையாளர் அரவிந்த் இறந்தது ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மத்தியில் இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.