தருமபுரி– முன்னாள் ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…
தருமபுரி முன்னாள் ஆட்சியர் மலர்விழி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 2018 பிப்ரவரி 28 முதல் 2020 அக்டோபர் 29 வரை தருமபுரி ஆட்சியராக மலர்விழி இருந்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியராக மலர்விழி பதவி வகித்தபோது நடந்த முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் ரத்து புத்தகங்களை தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிக விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.40க்கு கிடைக்கும் ரசீது புத்தகங்களை ரூ.135க்கு வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தெரிவித்துள்ளது.தனியார் நிறுவனத்திடம் இருந்து மொத்தமாக வாங்கி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ரூ.1.31 கோடி அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தாகிர் உசேன், வீரய்யா, பழனிவேல் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மலர்விழி தற்போது சென்னை அறிவியல் நகர துணை தலைவராக உள்ளார். மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.