தமிழக டிஜிபிசைலேந்திரபாபு காவல்துறைக்குமுக்கிய உத்தரவு
தமிழகத்தில் லாக்அப் டெத் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவுகளை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
டிஜிபி வெளியிட்டுள்ள வழிமுறைகள்;-
* குற்றம் சாட்டப்பட்டவர்களை, சந்தேக நபரை அடிக்கவோ அல்லது சித்ரவதை செய்யவோ கூடாது என்று அனைத்து காவல் துறை அதிகாரிகளும் காவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
* குறிப்பாக தனிப்படையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல் நிலையத்தில் மட்டுமே வைத்திருக்க வேண்டும். குடியிருப்புகள், லாட்ஜ்கள் போன்றவற்றில் வைக்கக் கூடாது.
* குற்றவாளியிடம் வாக்குமூலம் பெறும் போது வன்முறையை கையாள்வது கூடாது.
* கேள்விகள், கைரேகைகள் மற்றும் சிடிஆர்எஸ் மூலம் விஞ்ஞான விசாரணை நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
* குற்றவாளிகள் போலீஸ் காவலில் இருக்கும் காலம் முழுவதும் தனிப்பிரிவு காவலர் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் இருக்க வேண்டும்.
* காவலில் உள்ள நபர்களுக்கான உணவு, மருந்துகளையும் அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.
* கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை, மருந்து நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும்.
* காவலில் வைக்கப்படுவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும். உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறையை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
* மது, போதைப் பொருள் போன்ற வற்றுக்கு அடிமையான குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்படக் கூடாது. ஏனெனில் அவர்கள் போதைப் பொருள் கிடைக்காத காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டு இறந்து விடுவார்கள்.
* காவல்நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல், போலீஸ் சித்ரவதை பற்றிய தவறான குற்றசாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
* சீலிங் பேன், ஹார்பிக், ஆசிட் போன்ற கழிவறையில் உள்ள துப்புரவுக் பொருட்கள், கூர்மையான பொருள்கள் போன்ற தற்கொலைக்கு உதவும் சூழல்களில் இருந்து லாக் அப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும்.
* தேவையான அடிப்படை ஆடைகள் வழங்கப்பட வேண்டும். லுங்கி, வேஷ்டியை தவிர்க்கலாம்.
* குற்றச்சாட்டப்பட்டவரை இருசக்கரவாகனத்தில் அழைத்து செல்லக்கூடாது.
* குற்றம் சாட்டப்பட்ட பெண்களை மாலை முதல் விடியற்காலை வரை கைது செய்யக்கூடாது.
* பெண்களை இரவு காவலில் வைக்கக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்பு கடுமையாக நடந்து கொள்ள கூடாது.
* குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்கும்போது அவர்கள் கொடுங்குற்றவாளியாக இருந்தால் தவிர அவர்களை விரட்டக் கூடாது.
* குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்காக காவல் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களை கொண்டு வரக்கூடாது. போக்குவரத்து காவல்துறை வாகனத்தை அல்லது செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.