fbpx
Others

சென்னை மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் தான் தமிழ் இனம்

 மொழி என்பது ஒரு இனத்தின் உயிர்; இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை ஆகியவை இணைந்து சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘‘சென்னை இலக்கிய திருவிழா-2023’’ என்ற பெரும் விழாவை நடத்தின. விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண் இயக்குநர் கஜலட்சுமி, தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, சென்னை மேயர் பிரியா, எழுத்தாளர் பவா செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். கேரள எழுத்தாளர் பால் சக்காரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று புரட்சிக்கவிஞரால் போற்றப்பட்ட நம் தாய்மொழியான தமிழுக்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம். அதுவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பெயரில் அமைந்த இந்த நூற்றாண்டு கட்டிடத்தில் இந்த நிகழ்ச்சி நடப்பது பொருத்தமாக அமைந்திருக்கிறது. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நாடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குபெறும் வகையில் இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பெருமையால் மட்டுமல்ல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள தமிழன் என்ற உரிமையால் விழாவில் பங்கெடுப்பதில் பெருமைப்படுகிறேன்.
திமுகவின் ஆட்சிக்காலம் எப்போதும் தமிழாட்சி காலம்தான். தமிழ்நாட்டில் திமுக என்ற இயக்கத்தின் ஆட்சி என்பது  தமிழ் இலக்கிய இயக்கத்தின் ஆட்சியாக நடந்து வருகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழருடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது திமுக அரசு, செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது கலைஞர் என்பதை நாடு மறந்துவிட முடியாது. ‘மெட்ராஸ்’ என்ற பெயரை ‘சென்னை’ என்று மாற்றியது, ஸ்ரீ, ஸ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வமாக ஆக்கியது.தலைநகரில் வள்ளுவர் கோட்டமும், கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது, திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, சிலப்பதிகாரத்தின் பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் பூம்புகார் கோட்டம் அமைத்தது, தமிழில் வழிபாடு நடத்தும் உரிமையை பெற்றுத் தந்தது, ஆட்சிமொழியாக தமிழை முழுமையாக்கியது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டது, தமிழை கணினி மொழி ஆக்கியது, தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்க ஏற்பாடு செய்தது, உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது, திராவிடப் பல்கலைக் கழகத்திற்கு நிதி வழங்கியது, தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999ல் நடத்தியது, அனைத்து விழாக்களிலும் ‘நீராரும் கடலுடுத்த..’ என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும் என்று உத்தரவிட்டது, சென்னை கடற்கரையில் அவ்வையார், கண்ணகி, கம்பர், வீரமாமுனிவர், ஜி.யு.போப், வ.உ.சி., பாரதியார், பாரதிதாசன் சிலைகளை அமைத்தது,  தொல்காப்பியப் பூங்கா அமைத்ததும் திமுக ஆட்சிக்காலத்தில் தான். பொங்கல் திருநாளுக்கு மறுநாளை திருவள்ளுவர் நாளாக அரசு விடுமுறையுடன் அறிவித்தது திமுக, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதனால் தான் திமுக ஆட்சியை தமிழாட்சி என்று நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை முத்தமிழ் வளர்ச்சிக்காகச் நம்முடைய ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை, எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள், குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு, திராவிடக் களஞ்சியம் உருவாக்கம், இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, அமெரிக்காவில் உள்ள ஊஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ரூ.2 கோடியே 50 லட்சம்  நிதி உதவி, ஜெர்மனியில் உள்ள கோலாம் பல்கலைக்கழக தமிழ்த் துறை தொடர்ந்து இயங்க ரூ.1 கோடியே 25 லட்சம்  நிதி உதவி அளித்தது, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் தனித் துறையாக தொடங்க ரூ.5 கோடி நிதி உதவி வழங்கியது.
நூலகங்களுக்கு சிற்றிதழ்கள், இலக்கிய மாமணி விருதுகள், உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், திசைதோறும் திராவிடம், குறள் பரிசு, முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம், தீராக்காதல் திருக்குறள் என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல இலக்கியத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கிறது. தனது துறையின் மூலமாக தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், ஆற்றி வரும் அரும்பணி, நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் நினைத்து நினைத்து மெச்சத்தக்க பணியாக அமைந்திருக்கிறது என்பதை மனதார பாராட்டுகிறேன்.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையாக இருந்தாலும், தமிழ்வளர்ச்சித் துறையாக இருந்தாலும், செய்தித் துறையாக இருந்தாலும், தமிழ் இணையக் கல்விக் கழகமாக இருந்தாலும், அனைத்தும் மிகப்பெரிய பதிப்பகங்களுடன் போட்டி போடக் கூடிய வகையில் அறிவுக் கருவூலங்களை வெளியிட்டு இருக்கின்றன. அதிலும் கடந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான புதிய புதிய புத்தகங்களை பார்க்கிறேன். கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 1974ம் ஆண்டு ஜனவரி 16ல், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் 176 கல்லூரி பாட நூல்களை வெளியிட்டு அன்றைய முதல்வர் கலைஞர் பேசினார்.
“தமிழைப் படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். தமிழைப் படிப்பது என்பது சங்ககால இலக்கியங்களை, காவியங்களை, கவிதைகளை நம் பழங்கால பனுவல்களை படிப்பது, தமிழைப் படிப்பது தேவை. தமிழில் படிப்பது என்பது – வரலாறு படிப்பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப்பது, பல்துறைகளைப் படிப்பது. அதைவிட தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. தமிழ்நாட்டில் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் அது தேவை என்று தமிழ்மொழியில் அறிவுச் செல்வம் பெருகவேண்டியதைப் பற்றி உரையாற்றியுள்ளார். அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி எது என்று கேட்டால் இந்த நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கலைஞர், மேலும் ஒன்றை அந்த நிகழ்ச்சியில் குறிப்பிடும் போது, ‘’மொழி மானத்தைப் பெற்றாக வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். இன்றைய தேவை என்பது இதுதான். மொழி என்பது ஒரு இனத்தின் உயிர், இலக்கியம் என்பது ஒரு இனத்தின் இதயம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. மொழியைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுத்த இனம்தான் நம்முடைய தமிழ் இனம். திராவிட இயக்கம் அரசியல் இயக்கமாக இருந்தாலும் மொழி காப்பு இயக்கமாகவே தொடக்கம் முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும், எந்த அரசியல் கட்சியும், இலக்கிய இயக்கமாக இருந்ததில்லை. திமுக தான் அப்படி வளர்ந்தது. தன்னை வார்ப்பித்துக் கொண்டது.‘‘தீனா மூனா கானா’’-திருக்குறள் முன்னேற்றக் கழகம் என்று திரைப்பாடலில் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கே. அரசியல் தலைவர் தான் நம்முடைய கலைஞர். ஆனால் குறளோவியமும், சங்கத்தமிழும் அவர் பெயரை தமிழ் உள்ளவரை சொல்லிக் கொண்டே இருக்கும். எத்தனையோ திட்டங்களைத் தீட்டினாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் 133 அடியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையும், காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்றைக்கும் இருக்கின்றன. இதை நான் சொல்வதற்கு காரணம், மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும்.அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நடத்துகிறோம். இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். மதவாதத்தாலும், சாதியவாதத்தாலும், மனிதர்களுக்குள் பிளவு ஏற்படும்போது-’பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்ற திருவள்ளுவரின் ஒரு வரி மனிதனை ஒன்றாக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி, மனித சமுதாயத்துக்குள் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் துடைத்தெறியும்.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற வரி கல்நெஞ்சத்தையும் கரைக்கும். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தம் மெய்வருத்தக் கூலி தரும்,  என்பதை விட தன்னம்பிக்கை வரி உலகத்தில் உண்டா. இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் அனைவர் குறித்தும் நான் சொல்லத் தேவையில்லை. நீங்களே அறிவீர்கள். உலகின் புகழ்பெற்ற புத்தகங்கள் அனைத்தும் இங்கே மொழிபெயர்க்கப்பட்டு விடுகிறது. நம்முடைய தமிழ்ப்படைப்புகள், உலகின் பல மொழிகளுக்கு மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.இந்த ஆண்டு முதல் உலகப்புத்தகச் சந்தையை இங்கேயே கண்காட்சியாக நடத்தப் போகிறோம். உன்னதமான தமிழ்ப்படைப்புகள் அனைத்தும் உலகத்தின் பல மொழிகளுக்கு போக இருக்கின்றன. இந்த நேரத்தில் இத்தகைய படைப்புகள் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட வேண்டும். அதற்கு இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும். படைப்பரங்கம், பண்பாட்டரங்கம், பயிலரங்கம், குழந்தைகள் இலக்கிய அரங்கம், நிகழ்த்துக் கலைகள் என மிக விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இது போன்ற திருவிழாக்கள் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க உறுதுணையாக அமையும்.
மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் போவதற்கு முன்னால் மருத்துவரிடம் அனுமதி பெற்று புத்தகம் படித்துக் கொண்டு இருந்தார் பேரறிஞர் அண்ணா. தூக்கு மேடைக்குச் செல்லும் போதும் படித்துக் கொண்டு இருந்தார் மாவீரன் பகத்சிங். வரலாற்றை படித்தவர்களால் தான் வரலாற்றைப் படைக்க முடியும். இலக்கியம் படித்தால் தான் நாம் வாழும் சமுதாயத்தை உணர முடியும். இலக்கியம் என்பது பொழுது போக்கு அல்ல, அதுதான் நமது நோக்கும் போக்குமாக மாற வேண்டும். இலக்கியம் என்பது பேரியக்கமாக மாற வேண்டும்.புத்தகக் கண்காட்சிகள் மாவட்டந்தோறும் பரவி நடப்பதைப் போல இலக்கிய விழாக்களும் மாவட்டந்தோறும் பரவி நடைபெற வேண்டும். இது கூடி கலையும் கூட்டம் அல்ல, கூடிப் படைக்கும் கூட்டம் என்பதை நிரூபிக்கும் வகையில் இலக்கிய விழா சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நடத்துகிறோம்.* மொழியைப் பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது. அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். அதற்காகத்தான் இத்தகைய இலக்கிய விழாக்களை நடத்துகிறோம்.
* இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழ் உணர்வை ஊட்டியாக வேண்டும். தமிழ் இலக்கிய உணர்வை ஊட்டியாக வேண்டும். இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும்

Related Articles

Back to top button
Close
Close