675 புதிய மருத்துவர்கள் நியமனம்…! தமிழக அரசு அறிவிப்பு!
New doctors appointment says tn government

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் தமிழகம் உள்பட வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் தமிழகத்தில் இந்த பாதிப்புக்கு 127 பேர் பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்து 728 பேர் பாதிப்படைந்து உள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக 3 மாத ஒப்பந்த அடிப்படையில் 675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய நலவாழ்வு இயக்ககத்தின் மூலம் நியமிக்க சுகாதார துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அவர்கள் உடனடியாக பணியில் சேரும்படி வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. 3 மாத காலத்திற்கு பின், தேவைக்கேற்ப அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும்.
அதற்காக அவர்களுக்கு ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடப்பட உள்ளது.















