கோவையில் அங்கன்வாடி அபாய கட்டிடம்….?
கோவையில் இடிந்து விழும் நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை புனரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட வேலாண்டிபாளையம் பகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஓட்டுக்கூரை வேயப்பட்ட இந்த அங்கன்வாடி கட்டிடம் முழுமையாக சிதிலமடைந்து உள்ளது. இந்த மையத்தை அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் வெங்கடாபுரம் வெங்கடசாமி வீதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் சத்துணவு கட்டிடமும் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மழைக் காலங்கள் தொடங்கியுள்ள நிலையில் உடனே அந்த இரண்டு கட்டிடங்களையும் புதிதாகக் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்..