கா்நாடக காவிரி–தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்துவரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 20,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காவிரி ஆற்றில் காலை 6 மணிக்கு வினாடிக்கு 5,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து 10.30 மணிக்கு 7,500 கனஅடியாக உயர்ந்து, பின்னர் 12,000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவர் பாணி, திடீர் அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரி நீா் வெளியேற்ற வாய்ப்புள்ளதாலும் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதாலும் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.