fbpx
Others

ஒன்றியஅரசு–அமலாக்கத்துறை வழக்கு & ரெய்டுஎண்ணிக்கைஅதிகரிப்பு

ஒன்றிய பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகளில் அமலாக்கத்துறை வழக்குபதிவு 505% அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமலாக்க இயக்குனரகம், மும்பை, சென்னை, சண்டிகர், கொல்கத்தா, டெல்லி ஆகிய ஐந்து பிராந்திய அலுவலகங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பிராந்திய அலுவலகங்கள் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர்களால் வழி நடத்தப்படுகின்றன. இதன் மண்டல அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, கொச்சி, டெல்லி, பனாஜி, கவுகாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா,ஸ்ரீநகர் போன்ற இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு மண்டல அலுவலகங்களும், தலா ஒரு இணை இயக்குனரின் தலைமையில் செயல்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் ஏராளமான பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் தலைவர்கள் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 500 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சக தகவலின்படி, கடந்த 2018-19 மற்றும் 2021-22ம் ஆண்டுகளுக்கு இடையில் (கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்), அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 505 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2018-19ல் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் 1,180 வழக்குகளாக அதிகரித்துள்ளன.   அதேநேரம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை எண்ணிக்கையானது 2004-14 மற்றும் 2014-22ம் ஆண்டுக்கு இடையில் 2,555 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2004-14ம் ஆண்டுக்கு இடையில் 112 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் 2014-22ம் ஆண்டுக்கு (ஒன்றிய பாஜக ஆட்சி) இடையில், 2,974 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதாவது சோதனைகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற சோதனைகள் மற்றும் வழக்குகளின் அடிப்படையில் ரூ.95,432.08 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.மேலும்அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போதைய தரவுகளின்படி பார்த்தால் அமலாக்கத்துறையின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Related Articles

Back to top button
Close
Close