இமாச்சல பிரதேச விபத்தில் மாயமான மகன் பற்றி தகவல் தந்தால் ரூ.1 கோடி..
இமாச்சல பிரதேசத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்ததில் மாயமான மகன் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் சைதை துரைசாமி. அவரது மகன் வெற்றி (45) சமீபத்தில் இமாச்சல பிரதேசத்துக்கு நண்பர் கோபிநாத் என்பவருடன் சுற்றுலா சென்றார்.கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-5-ல் காரில் சென்று கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை ஒட்டி இருந்த சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சைதை துரைசாமி மகன் வெற்றியை தேடும் பணியில் அம்மாநில போலீஸார், பேரிடர் மீட்பு படையினர், உடன் பழங்குடியின மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல் அறிந்து இமாச்சல பிரதேசம் சென்றுள்ள சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், பழங்குடியின மக்களை சந்தித்து மகனை மீட்க உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.