போராடினால் சம்பளம் கட்!;தமிழக அரசு அதிரடி!!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் , அரசு ஊழியர்களான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று இந்த வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் தெளிவாகஉள்ளனர்.
2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டதையே கடைபிடிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முயன்றனர். ஆனால் அதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிபதிகள் கேட்டுக்கொண்டதால் அடிப்படையில் அந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த பிரச்சனைக்கு அரசு எந்த வித பதிலும் அளிக்காததால், கைவிடப்பட்ட போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை நடத்துவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கும் நிலையில் ,தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்துத்துறைக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் , அதில்
மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன் , அதன் அடிப்படையில் வேலைநிறுத்த போராட்டம், போராட்டம் செய்வதாக அச்சுறுத்துவது, இத்தகைய போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது, கிளர்ச்சியில் ஈடுபடுவது, அரசு அலுவகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்பது ஆகியவை தமிழ் நாடு அரசு ஊழியர்களின் ஒழுங்கு விதிகளின் படி 20, 22, மற்றும் 22ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாகும்.
எனவே தமிழக அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஒழுங்கு விதிகளையும் மீறக்கூடாது என்று ஒவ்வொரு துறையின் ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும், அப்படி மீறுபவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறை வேண்டும்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்படும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசு ஊழியர்களில் யாராவது வேலைக்கு வரவில்லை என்றால் , அவர்கள் எடுத்த அந்த விடுமுறைகாலம் அங்கீகாரமற்றது என்று கருதி “பணியில்லை ,ஊதியம் இல்லை’ என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த விடுமுறை நாளிற்கான சம்பளமும், சலுகையும் வழக்கமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ விடுப்பு எடுக்கவேண்டுமானால் , அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மருத்துவ வாரியத்திடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தால் அந்த விடுப்பு உண்மையானதா? என்று கோணத்தில் அலசி ஆராய வேண்டும். அப்படியில்லாமல் அந்த விடுப்பு சரியான காரணத்திற்கு எடுக்கவில்லை என்று மருத்துவவாரியம் கூறினால் , அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசுதுறை அதிகாரிகளும் பொதுமக்களுக்கோ, அல்லது மாணவர்களுக்கோ இந்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த போராட்டம் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பவேண்டும். அதில் எத்தனை ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்ற விவரத்தை தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.