அருணாசலப் பிரதேசத்தில்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா துடிப்பு மிக்க கிராமங்கள் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அருணாசல பிரதேச மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். அருணாசல பிரதேச மாநிலத்தின் கிராமங்களின் பெயர்களை சீனா கடந்த வாரம் மாற்றி சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமித் ஷாவின் இந்த பயணம் கவனம் பெற்றுள்ளது.எல்லை பகுதிகளை வலுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தரகாண்ட் & ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் வடக்கு எல்லையை ஒட்டிய 19 மாவட்டங்களின் 46 தொகுதிகளில் 2,967 கிராமங்களை அடையாளம் கண்டுள்ளது. இவற்றில் துடிப்பு மிக்க கிராமங்கள் என்ற திட்டத்தின் கீழ் விரிவான வளர்ச்சிக்காக பணிகள் மேற்கொள்கிறது.அதன்படி, மத்திய அமைச்சர் அமித் ஷா அருணாச்சலப் பிரதேச அரசின் “பொன்விழா எல்லை ஒளிர்வுத் திட்டத்தின்” கீழ் கட்டப்பட்ட ஒன்பது சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் இந்தோ-திபெத்திய எல்லை காவல்(ITBP) பணியாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் இந்தோ-திபெத்திய எல்லை காவல் திட்டங்களையும் அவர் வெளியிடுகிறார். அத்துடன் அமித்ஷா நாம்டி களத்திற்குச் சென்று வாலாங் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அடையாளம் காணப்பட்ட எல்லைக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக சாலை இணைப்பு, குடிநீர், சூரிய மற்றும் காற்றாலை உள்ளிட்ட மின்சாரம், இணைய இணைப்பு, சுற்றுலா மையங்கள், பல்நோக்கு மையங்கள் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவை கிராமங்களின் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் அருணாசல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை சீண்டும் விதமாக அமித் ஷாவின் வருகை உள்ளதாக அந்நாடு கண்டனம் தெரிவித்துள்ளது..