அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது வழக்கு ….!
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, அம்பை, விகேபுரம் பகுதிகளில் வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அரசு அமைத்த விசாரணை அதிகாரியான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மை செயலாளர் அமுதா, முதற்கட்டமாக கடந்த 10ம் தேதியும், 2ம் கட்டமாக 17, 18ம் தேதியும் அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். அப்போது 10 பேர் சாட்சியம் அளித்தனர். காவல்நிலையங்களிலும் அதிரடி சோதனை நடத்தினார். இந்நிலையில் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மீது காயம் ஏற்படுத்துதல், ஆயுதம் கொண்டு தாக்குதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் (323, 324, 326, 506 (1)) என4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட வாலிபர் சுபாஷ், நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் டிஎஸ்பி பொன்ரகு, இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். பல்லை பிடுங்கியதில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.