அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.விழுப்புரத்தில் பதியப்பட்டு நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதா என்கிற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செம்மண் குவாரி தொடர்பாக 2012ல் அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு தற்போது சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை, எழும்பூர், பெசன்ட் நகர் , விழுப்புரம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்பியுமான கெளதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடியின் உறவினர்கள் , தொழில் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். . அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சட்டவிரோத பண மோசடி வழக்கில் அவரை கைதும் செய்தது.அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து இன்று அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களுருவில் இன்று 2 எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அதே போல் பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.