சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் விடுவிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 90 பேரில் 30 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டனர்..
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் மாத ஆரம்பத்தில் ஒற்றைப்பட இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சில நாட்களில் இரட்டைப்படையாக உயர்ந்த நிலையில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் 1000 பேருக்குமேல் பாதிக்கப்பட்டனர்.
ஏப்ரல் மாத முதல் வாரத்தில் கடுமையாக உயர்ந்ததால் தமிழகம் 10-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் சென்னையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டனர்.
ஆரம்பத்தில் ஓரிரண்டு பேர் டிஸ்சார்ஜ் என்கிற நிலையைத் தாண்டி 10 பேர், 20 பேர் என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை மருத்துவமனை டீன், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர். அவர்களை மேலும் சில வாரங்கள் அரசு கண்காணிக்கும். அவர்கள் 14 நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்