நீலகிரி மாவட்டத்துக்கு, 3வது நாளாக இன்றும் ‘ரெட் அலர்ட்…! சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
Chennai weather centre red alert to nilgiri
சென்னை:
வெளுத்து கட்டும் மிக கன மழையால், நீலகிரி மாவட்டத்துக்கு, மூன்றாம் நாளாக, இன்றும், ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனிக்கு, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின், மலையோர பகுதிகளில், 3 நாட்களுக்கு மேலாக, கன மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப் படி, நீலகிரியில், 39 செ.மீ., மழை பெய்துள்ளது.
கன மழையால், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில், அதிக கன மழைக்கான, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை, இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு, ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. பொதுவாக, 21 செ.மீ.,க்கு மேல் கன மழை பெய்யும் என்றால், அந்த பகுதிக்கு, ரெட் அலர்ட்; 12 – 20 செ.மீ., வரை பெய்யும் என்றால், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படும்.
இதுகுறித்து, சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு: ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலை ஒட்டி நிலவும், தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென்மேற்கு பருவ காற்று தீவிரம் அடைந்துள்ளது. இதனால், நீலகிரியில் அதிக கன மழையும், கோவை, தேனியில், கன மழை முதல் மிக கன மழையும் பெய்யும்.
திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், வேலுார், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் புதுச்சேரியில், லேசான மழையும் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.