ரூ.15 ஆயிரம் கோடி, 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…! முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்து!
MOU sign today in tamilnadu

சென்னை:
ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.
சீனாவின் கொரோனா வைரஸ் தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கம் காரணமாக சில நாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளன.

இந்த சூழலில், இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு’ ஒன்றினை அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் முயற்சியால், ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளன. அதற்காக, ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.















