விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் வழக்கு பதிவு !
விருப்பப்பட்ட சேனல்களை பார்க்க தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் ‘டிராய்’யின் இந்த உத்தரவை எதிர்த்து கேபிள் ஆப்பரேட்டர் சங்கம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மத்திய அரசின் உத்தரவின் பேரில் அனைத்தும் டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிதாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 70 சதவீத இணைப்புகள் மட்டுமே செட்டாப் பாக்ஸ் இணைப்பாக மாறியுள்ளது. இந்த செட்டாப் பாக்ஸ் மூலம் நாம் விரும்பிய அனைத்து சேனல்களையும் காணலாம்.
இந்நிலையில் அரசு மற்றும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் வழங்கும் சேனல்களின் விலையில் வித்தியாசம் இருப்பதால் விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் செலுத்தலாம் எனும் உத்தரவை இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் அறிவித்தது.
இந்த அறிவிப்பில், இந்த டிசம்பர் 30-ஆம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்ப்பதற்கு தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று டிராய் அறிவித்திருந்தது.
இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பாக ஜனவரி 31-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் டிராய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.