ராமர் கோயில் மிகப்பெரிய நன்கொடை திருட்டு –பிரதமர் அமைதி காப்பது ஏன்?
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “நரேந்திர மோடி நாட்டின்
பிரதமரானதற்கு ராமர் கோயில் விவகாரமும் ஒரு காரணம். எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. தற்போது அங்கு மிகப்பெரிய நன்கொடை திருட்டு நடந்துள்ள போதிலும் பிரதமர் அமைதி காப்பது ஏன்? பாஜகவினர் தங்களின் அரசியல் லாபத்திற்காகக் கடவுளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்று குற்றம்சாட்டினார். மேலும் முன்னதாக இம்முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஊழல்
கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கே.சி. வேணுகோபால் குறிப்பிட்டிருந்தார்.மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ராமர் கோயில் அறக்கட்டளைக்கு எதிராக, மாநில அரசின் கீழ் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு நேர்மையான விசாரணையை நடத்த முடியாது என்றும், இதில் முக்கியப் புள்ளிகளைக் காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முறைகேடுகளைக் கேள்வி கேட்பவர்களை உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சிப்பது, குற்றவாளிகளை நியாயப்படுத்துவது போல் உள்ளது என்றும் வேணுகோபால் சாடியுள்ளார். இதற்கிடையில், இந்த நிதி முறைகேடு தொடர்பாக அறக்கட்டளையின் முன்னாள் பொதுச் செயலாளர் சம்பத் ராய், முன்னாள் அறங்காவலர் அனில் மிஸ்ரா மற்றும் நிர்வாகி கோபால் ராவ் உள்ளிட்டோருக்கு எதிராக பைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் அயோத்தி காவல்துறையிடம் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளது. முன்னதாக ஜூன் 25 அன்று இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பத் ராய் மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களின் பதவிகளைராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உபி அரசு தனது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை காலத்தை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.