பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது – கமலஹாசன் விமர்சனம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பொள்ளாச்சி சம்பவம் குறித்து தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவரையும் முக நூலில் நட்பாக பழகி ஆசை வார்த்தைகள் கூறி, காதல் வலையில் விழ வைத்து, அவர்களை நேரில் பார்க்க வேண்டுமென வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து நாசமாக்கி, அந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து, அதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அவர்களை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர் ஒரு கும்பல்.
இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான 4 குற்றவாளிகளான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் பலர் சம்மந்தப்பட்டிருப்பதால் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை ஒரு ஆடியோ பதிவில் கேட்டதாகவும், அதை கேட்டு தனது நெஞ்சம் பதறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்பயா விவகாரம் நாட்டையே உலுக்கிய போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாலியல் குற்றங்களை கொடூர குற்றங்களாக கருத வேண்டுமென கூறியதை குறிப்பிட்டு, அவர் பெயரை கொண்டு ஆட்சி செய்பவர்களால் எப்படி இவ்வாறு மெத்தனமாக இருக்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.