மார்ச் 10 – ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!
நாடு முழுவதும் போலியோ சொட்டுமருந்து முகாம் மார்ச் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரை இதற்கான பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே சொட்டு மருந்து போட்டிருந்தாலும் நாளைய முகாமில் பங்கேற்று போலியோ மருந்து போட்டுக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நலவாழ்வு மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில்
சொட்டுமருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோ நோய் இல்லாத நாடாக இந்தியா இருந்தாலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது தொடர்ந்தே வருகிறது. இருப்பினும் நிகழாண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. பெற்றோர்கள் உங்கள் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும். போலியோ சொட்டுமருந்து போடுவதால் எந்தவித தீங்கும் கிடையாது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச்சூழலிலிருந்து அறவே ஒழிக்கலாம்.