பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது !
கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி கணித்துறை பேராசிரியை நிர்மலா தேவி. அவர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக, ஒரு மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவின் அடிப்படையில் நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சுமார் 200 நாள்களுக்கும் மேலாக நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் இருந்துவருகிறார். நிர்மலாதேவி தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நிர்மலா தேவி தரப்பில் ஜாமின் வழங்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, தனி நபர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிர்மலாதேவி வியாழக்கிழமை சிறையிலிருந்து வெளியே வருவார் என தெரிகிறது.