
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் கால்வாயில் தேங்கிய கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை ஆகும். இங்கு, ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களும் இயங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச்லிருந்து பட்டரவாக்கம் செல்லும் வழியில் மழைநீர் வடிகால் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பல நாட்களாக பிளாஸ்டிக், திடக்கழிவு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் எண்ணெயுடன் கலந்து சுகாதாரமற்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த கால்வாயில் சேரும் கழிவு, கொரட்டூர் ஏரி நீருடன் கலந்து தண்ணீர் மாசுபட்டு வருகிறது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் சிகரெட் புகைத்துவிட்டு கால்வாயில் போட்டுவிட்டு செல்லும்போது, எண்ணெய் கழிவில் திடீரென தீப்பற்றி எரிகிறது. இந்த தீயை அணைக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது. பெரிய அளவில் தீபிடித்தால் ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, தொழிற்சாலை ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, மழைநீர் கால்வாயை சுத்தம் செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.