திமுக கூட்டணி கட்சிகளுடன் இன்று தொகுதி உடன்பாடு !

நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதிசெய்து வருகின்றன. இந்நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளுடன் திமுக தொகுதி உடன்பாடு காண உள்ளது.

ஏற்கனவே ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சியுடனும் பாரதீய ஜனதா கட்சியுடனும் கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.கவுக்கு ஏழு மக்களவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் பா.ஜ.கவுக்கு ஐந்து மக்களவை இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது இடங்களும் புதுச்சேரியில் ஓரிடமுமாக பத்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், தி.மு.கவுடன் நீண்ட காலமாகவே இணைந்து செயல்பட்டுவரும் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதற்கிடையில், தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ம.தி.மு.க., வி.சி.க., சி.பி.எம். ஆகியவை குறைந்தது இரண்டு இடங்களையாவது எதிர்பார்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தையாவது எதிர்பார்க்கிறது. ஆனால், தி.மு.கவைப் பொறுத்தவரை இந்தக் கட்சிகள் அனைத்திற்குமே தலா ஒரு இடத்தை மட்டுமே தர விரும்புகிறது.
தற்போது, தேமுதிக வராத நிலையில் கூட்டணிக் கட்சிகள் கேட்கும் 2 தொகுதிகளை திமுக ஒதுக்கும் எனத் தெரிகிறது. இதற்கான தொகுதி உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இன்று கையெழுத்திடுவர் என நம்பப்படுகிறது.















