42-ஆவது புத்தக கண்காட்சி…தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி !
42-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்னிந்திய விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி நடத்தும் 42-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது. 20-ம் தேதி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும்.
புத்தக கண்காட்சிகாக 820 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 லட்சம் தலைப்புகளில் ஒன்றறை கோடி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல் கண்டுபிடிப்பு, வரலாறு, பொது அறிவு, சிறு கதைகள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
புத்தக கண்காட்சிக்கு செல்வோருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிட வசதி, ஏடிஎம், இலவச வைஃபை, செல்போனுக்கு சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை முதலமைச்சர் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, வைகைச் செல்வன், நல்லி குப்புசாமி செட்டியார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ். வயிரவன், செயலாளர் ஏ.ஆர். வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.