ரூ.1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் !
தமிழகமெங்கும் ரூ.1000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலைக்கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதிகள் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அதனுடன் ஆயிரம் ரூபாய் பணமும் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
அனைத்து நியாய விலைக்கடைகளிலும் திங்கள் முதல், காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அடிப்படையில் தான் வழங்கப்படும். ஸ்மார்ட் ரேஷன் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியும் பொங்கல் சிறப்பு பரிசை பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்புக்காக 258 கோடி ரூபாயும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசுக்காக சுமார் 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.