பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசால் இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க தனித்து இருப்பதே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

அதன் அடிப்படையில் இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கை பிரதமர் மோடி பிறப்பித்தார். அன்றய தினம் தொடங்கிய இந்த ஊரடங்கானது அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என தெரிவித்தார்.அந்த 21 நாள் ஊரடங்கானது ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்ததால் , அந்த ஊரடங்கை மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் , கொரோனா வைரஸின் பரவலானது குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
இந்நிலையில் வரும் 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொலி மூலமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மாநில முதல்வர்களுடன் இந்த ஊரடங்கைப் பற்றியும் ஆலோசிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.















