தவெக விருப்ப மனு மற்றும் வேட்பாளர் தேர்வு எச்சரிக்கை விவகாரம்….?
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்க உள்ளது. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினரிடமிருந்து கடந்த 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு பெற 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட மனுவை சமர்ப்பிக்கும் போது 10,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.விருப்ப மனு விநியோகம் துவங்கிய முதல் நாளிலேயே ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் எத்தனை மனுக்கள் விற்பனையாகின, அவற்றில் எவ்வளவு திரும்பப் பெறப்பட்டன என்ற விபரம் வெளியிடப்படவில்லை. விருப்ப மனு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை பூர்த்தி செய்து திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 20 மனுக்கள் கூட முறையாக திரும்பப்பெறப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.விருப்ப மனுவை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க 10,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் பலருக்கும் முன்கூட்டியே தெரியவில்லை என கூறப்படுகிறது. பின்னர் அந்த தகவல் தெரிய வந்ததால், பலர் மனுவை பூர்த்தி செய்யாமல் வைத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகிறது. முதல் நாளிலேயே அதிக அளவில் மனுக்கள் விற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திரும்பப் பெற்ற மனுக்கள் குறைவாக இருந்தால் விமர்சனம் எழும் என்பதால், முழு விபரம் வெளியிடப்படவில்லை என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.இதற்கிடையில், மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால் விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும் அதை திருப்பிக் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் செலவை விஜய் ஏற்க உள்ளார் என்ற தகவல் கட்சிக்குள் பரவியதால், பல மாவட்டச் செயலர்களே வேட்பாளர்களாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது. கட்சியில் 120 மாவட்டச் செயலர்கள்உள்ளனர்.மாநிலநிர்வாகிகள்சிலரைத்தவிர்த்து,பலதொகுதிகளுக்கு வேட்பாளர் தேர்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனால், மற்ற நிர்வாகிகள் மனுக்களை அளிக்கக் கூடாது என மாவட்டச் செயலர்கள் எச்சரித்ததாக கூறப்படுகிறது. மனு வழங்கினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தலைவர் பெயரில் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்த பலரும் மனுக்களை திருப்பிக் கொடுக்காமல் வைத்துள்ளனர். கட்சிக்குள் நிலவும் இந்த சூழல் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், விருப்ப மனு மற்றும் வேட்பாளர் தேர்வு தொடர்பான இந்த விவகாரம் தவெக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.