விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது
நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி தொடக்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் பதிலளித்தால் மட்டுமே உத்தரவிட முடியும் என்றும் கூறினர்.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மார்ச் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.