ஜனவரி 2-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே வில்லங்க சான்று பெற முடியும் – பதிவுத்துறை அறிவிப்பு!
ஜனவரி 2-ஆம் தேதி முதல் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க சான்றிதழ்கள் ஆன்லைனில் மட்டுமே பெற முடியும். சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறும் நடைமுறை நிறுத்தப்படுகிறது.
இதுவரை பத்திரப்பதிவு, வங்கிகள் மற்றும் நீதிமன்ற பரிசீலனைக்கு நேரடியாக விண்ணப்பித்து பெறப்படும் வில்லங்கச் சான்றிதழ்களே ஏற்கப்படுகின்றன. இந்நிலையில், பதிவுத்துறை பணிகள் அனைத்தும், டிசம்பர் 10-ஆம் தேதி முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. எனவே ஆன்லைன் வழியே கட்டணம் செலுத்தி கியூ.ஆர்., குறியீட்டுடன், வில்லங்கச் சான்று மற்றும் பிரதி ஆவணங்களை பெறலாம்.
அசையாச் சொத்துகள் ( வீடு மற்றும் மனைகள்) வாங்குவோர், விற்போர் மற்றும் முந்தைய பரிமாற்ற விபரங்களை தெரிந்துக் கொள்ள வில்லங்கச் சான்றிதழ் பெறுவது அவசியம். வில்லங்க விபரங்களை பதிவுத்துறை
இணையதளத்தில் இலவசமாக தெரிந்துக் கொள்ளும் வசதி உள்ளது.
பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் கூறியதாவது: கட்டாய நடைமுறையாவதால், சார் பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வில்லங்கச் சான்று பெறும் நடைமுறை கைவிடப்படுகிறது. டிஜிட்டல் மயமாகாத காலத்துக்கான வில்லங்கச் சான்றிதழுக்கு மட்டும், நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பதிவுத் துறை இணையதளத்தில், சொத்துகளின் வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.