‘திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை’ – ஜெயக்குமார் விமர்சனம்
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் எனவும், திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கங்களை முன்வைத்து ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும், ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு மர்மமாக உள்ளது. யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமாவர்கள் சிறைச் செல்வார்கள்” என்றும் தெரிவித்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா விவகாரத்தில் திமுக வை விட தங்களுக்கு அதிக அக்கறை உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை அதிமுக அரசே தண்டிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக என்றுமே ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.