கலெக்டர்அலுவலகத்தில்-தாசில்தாருடன் ஆர்.ஐ., கட்டிப்புரண்டு சண்டை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(54). ஓசூர் மாநகராட்சியில் ஆர்.ஐ.,யாக பணியாற்றி வரும் இவர், சொந்தமாக கல்வி அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் இயக்குனராக, இவரது மனைவி பாரதி உள்ளார். இவரது அறக்கட்டளைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம், ராயக்கோட்டை மெயின்ரோட்டில் உள்ளது. இந்த நிலத்தில் இருந்து 1.40 ஏக்கர் நிலம், தர்மபுரி- ஓசூர் 6 வழிச்சாலை பணிக்காக, நெடுஞ்சாலைத் துறையினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆனால், பக்கத்து நிலத்துக்காரருக்கு அதிகளவில் பணம் கொடுத்துள்ளதால், தங்களுக்கும் கூடுதலாக இழப்பீடு வழங்கக் கோரி, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு பிரிவு தாசில்தாரிடம், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுரேஷ்குமார் மேல்முறையீடு செய்தார் .இந்நிலையில், நேற்று முன்தினம், சுரேஷ்குமார் மற்றும் பாரதி ஆகியோர், தாசில்தார் தர்மராஜை பார்ப்பதற்காக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த தர்மராஜிடம் இழப்பீடு தொடர்பாக சுரேஷ்குமார் கேட்டுள்ளார். இதில், அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், தகராறு முற்றிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டு, இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர். பின்னர், இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.