எந்த தொழில் எங்கு இயங்கலாம்?; ஊரடங்கு தளர்வு பற்றிய முழு விவரம்!!

சென்னை:
தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு மே நான்காம் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் அறிவுரையின் பேரில் வரும் மே 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை கீழ்க் காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளில் எவ்விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்படும்.
சென்னை தவிற தமிழகத்தில் பிற பகுதிகளில் எந்தெந்த தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
50 சதவீத பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித் துறை உள்பட) செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
15,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, நோய்தொற்றின் சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித் துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம்.
தொழில் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் ஊரகம், நகரம், 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித் துறை நிறுவனங்கள் இயங்க மே 17 வரை அனுமதி இல்லை.
நகரப் பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
மின்னணு வன்பொருள் (Hardware Manufactures) உற்பத்தி: 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள நூற்பாலைகள் (Spinning Mills) (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவீதம் பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நகரப் பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம் தொடர்பான தொழில்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம் 50 சதவீத பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நகர்புறங்களில் கட்டுமானப் பணிகள் தொடர்பாக:
பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதி அளிக்கப்படும்.
பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதி அளிக்கப்படும்.
அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.
பிளம்பர், எலக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக்,தச்சர் உள்ளிட்ட சுய திறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதி அளிக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதி அளிக்கப்படும்.
அச்சகங்கள் செயல்பட அனுமதி தொடர்பாக;.
கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமென்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள் சம்பந்தமாக;
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.
மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக் கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம்.
மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் (Malls) மற்றும் வணிக வளாகங்கள் (Market Complexes) இயங்க அனுமதி இல்லை.
மற்ற அனைத்து தனிக் கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதி அளிக்கப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையர்களும் அரசால் அறிவிக்கப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றியும் போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தியும் பணியாளர்கள், மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூடாமல் இருப்பதை கண்காணிக்கவும் எச்சரிக்கப்படுகிறது.
ஏறகெனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மைப் பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப் பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏடிஎம், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்குதடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல் பட எந்த வித தடையும் இல்லை.
கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம் சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன அனுமதிக்கப்படும்.
பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளும், பணிகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் அல்லது பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோரிடம் இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.
நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள் அல்லது வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம்.
அந்த வாகனங்களில் கண்டிப்பாக 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.
இதுவே தமிழக அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள் குறித்த செய்தி ஆகும்.















