ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள்..! பக்தர்களுக்கு எச்சரிக்கை!
Bogus websites to book dharshan tickets in tirupathi
திருப்பதி:
திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவில் போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதால் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதள முன்பதிவு வழியாக அளித்து வருகிறது. இதற்காக தேவஸ்தானம் tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் தரிசன டிக்கெட் வாடகை அறைகள் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. இந் நிலையில் ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல போலி இணையதளங்கள் செயல்பட்டு வருவதாக தெரிந்தது.
இதையடுத்து தேவஸ்தான கண்காணிப்பு அலுவலர்கள் 20க்கும் மேற்பட்ட போலி இணையதளங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து திருப்பதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் போலி இணையதள செயல்பாட்டாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்குரிய இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.