ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு – ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு.

ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு சவால் விடும் வகையில் ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கு ரூ.72 லட்சம் பரிசாக அளிக்கப்படும் என்று ஒரு தனியார் விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விட்டமின் வாட்டர் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது;
ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை நிறுத்தும் விதமாக அந்த வகை போன் பயன்படுத்தாத நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை டைப் செய்து அதை டிவிட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும். போட்டியில் கலந்துகொள்பவர்கள் கேள்விக்கான பதில்களுடன் ஹேஷ்டேக் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.
போட்டியாளர்கள் வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் தங்கள் பதில்களை பதிவு செய்துவிட வேண்டும். நிறுவனத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட கைபேசி வழக்கப்படும். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்கள் ஒரு ஆண்டிற்கு அதாவது 365 நாட்களுக்கு நிறுவனம் தரும் போனை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
எனினும் லேப்டாப் , டெஸ்க்டாப் , அமேசான் அலெக்ஸா,கூகுள் ஹோம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஸ்மார்ட் போன் , டேப்லெட் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. போட்டியாளர்கள் ஜனவரி 22-ஆம் தேதிக்குள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான மொபைல் போன் வழங்கப்படும்.
ஒரு ஆண்டு முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவில்லை என்பதை அந்நிறுவனம் நடத்தும் உண்மை கண்டறியும் சோதனைக்கு பின்பே பரிசு வழக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.















