பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா–பிரதமர் மோடிபுகழாரம்…

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று( 30/10/25 ) நடைபெற்று வருகிறது. முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவையொட்டி அவரது சிலைக்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛இந்தியாவி்ன் சமூக மற்றும் அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜி-க்கு புனிதமான குருபூஜை நாளின் மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன்.சமத்துவம்,நீதி, ஏழைகள், விவசாயிகளின் நலனுக்காக அவரது அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. அவரது கண்ணியம், சுயமரியாதை, ஒற்றுமையின் பக்கம் நின்றார். ஆழமான ஆன்மிகத்துடன் சமூகத்துக்கு சேவையாற்றினார்” என்று கூறியுள்ளார்.அதேபோல் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛நீதி, சமத்துவம் மற்றும் ஏழைகள் விவசாயிகள் மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த தேசியவாதியான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குரு பூஜை நாளான இன்று, அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.உண்மையான தேசபக்தராகவும் சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய தேவர் அவர்கள் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகமுக்கிய
பங்காற்றினார். அவரது, காலத்தால் அழியாத பெருமதிப்பு கொண்ட இலட்சியங்கள், ஒற்றுமை மற்றும் சேவை ஆகிய பாதையில் நம்மை தொடர்ந்து வழிநடத்துகின்றன” என புகழ்ந்துள்ளார். அதேபோல், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச் ராஜா உள்பட நிர்வாகிகள் சென்று மரியாதை செலுத்தினர். முத்துராமலிங் தேவருக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டார். ‛‛பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டம் கட்டப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பசும்பொன்முத்துராமலிங்தேவரின்சிலைக்குமாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்டாலின் உடன் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் ஐ பெரியசாமி, கேஎன் நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.முன்னதாக தேவர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்தனர். ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி செயல்பட்டு வருகிறார். செங்கோட்டையன், அதிமுகவில் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் தான் 3 பேரும் ஒன்றாக தேவர் ஜெயந்தி விழாவில் ஒன்றாக இணைந்துள்ளது தமிழக அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது.