சண்டிகார்: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் மோதல் வெடித்துள்ளது. கற்களை வீசி தாக்கியதோடு வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இந்த மாநிலத்தில் உள்ள நுஹ் மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அந்த அமைப்பினர்
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணி குருகிராம் – அல்வார் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது இளைஞர்கள் பலர் அடங்கிய குழு ஒன்று பேரணியை தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தொடர்ந்து வன்முறையாக மாறியது. கல்வீசி தாக்கிக் கொண்டதோடு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் பலர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால் அப்பகுதியில் 144 – தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதேபோல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடராமல் இருக்க அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் எச்சரிக்கை விடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல் கட்டதகவல்வெளியாகியிருக்கிறது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த வன்முறையில் சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் போலீசார் ஒலிப்பெருக்கிகள் மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அண்டை மாவட்டங்களில் இருந்தும் போலீசார் அவசர அவசரமாக பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஹரியானா தலைநகர் குருகிராம் அருகே உள்ள நூஹ் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ள்ளனர். பசு பாதுகாவலர் என தன்னை சொல்லிக்கொள்ளும் மோனு மனேசர் இந்த பேரணியில் கலந்து கொண்டதால், அங்குள்ள ஒரு சமூகத்தினர் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படுகிறது. நசீர் ஜூனைத் கொலை வழக்கில் தொடர்புடைய நபராகவும் மோனு மனேசர் சந்தேகிக்கப்படுவதால், ஒரு பிரிவு மக்கள் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த போதுதான் வன்முறை ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.